
விஜய் நடித்துவரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த காட்சி மொபைல் மூலம் மறைந்து நின்று எடுக்கப்பட்டது போல் தோன்றுகிறது. அடுத்தடுத்து படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகி வருவதால் வாரிசு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தொடர்ந்து இதுபோன்று வீடியோக்கள் வெளியானால், படத்தின் மீதான சுவாரசியம் குறையக் கூடும் என்பதால், வாரிசு படக்குழுவினர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். வீடியோ வெளியாகியிருப்பது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடிபல்லி வாரிசு படத்தை இயக்கி வருகிறார். தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, தெலுங்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.வாரிசு படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
விஜய்யின் பிறந்தநாளையொட்டி வாரிசு படத்திலிருந்து 3 போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. தற்போது வெளியாகியுள்ள படப்பிடிப்பு வீடியோவில் மருத்துவமனை காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் பிரபு டாக்டராக நடிக்க கூடும் என்று கருதப்படுகிறது.சரத்குமாரை ஸ்ட்ரெச்சரில் வைத்துக்கொண்டு அவசரஅவசரமாக விஜய் செல்வது போலவும், உடன் ஷாம் பின்னால் வருவது போலவும் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ள வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்த படத்தில் விஜய்க்கு அண்ணன் கேரக்டரில் ஷாம் நடிக்கிறார். இனிமேலாவது வாரிசு படக்குழுவினர் கூடுதல் கவனத்துடன் படப்பிடிப்பு தளங்களில் செயல்பட வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.