Breaking Newsஆர்ஜென்டினா - பிரான்ஸ் கால்பந்து இறுதிப்போட்டி மீண்டும் நடக்குமா?

ஆர்ஜென்டினா – பிரான்ஸ் கால்பந்து இறுதிப்போட்டி மீண்டும் நடக்குமா?

-

உலகக்கிண்ண காற்பந்து இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரி பிரான்ஸ் காற்பந்து ரசிகர்கள் தீவிரமான கையெழுத்து வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆட்டம் முடிந்த பிறகு பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கிண்ணத்தை வசமாக்கிக் கொண்டது. ஆனால் பிரான்ஸ் ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை.

போட்டி முடிந்ததில் இருந்தே இறுதிப் போட்டி சர்ச்சைகள் தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தொடங்கிவிட்டன.

இணையவழி ஊடாக மனுக்களை ஒருங்கிணைக்கும் மெஸ்ஓபினியன்ஸ் என்ற இணையத்தில் போட்டியை மீண்டும் நடத்துவது தொடர்பான கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. இதில் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் இந்த இணையவழி மனுவில் ஏற்கெனவே கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

ஆர்ஜென்டினா அணியின் முதல் இரண்டு கோல்களும் விதிமீறியவை என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘ஆர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பு அளித்தது தவறு’

ஆர்ஜென்டினா – பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோருவோரின் முதலாவதாகக் கூறும் காரணம், ஆர்ஜென்டினாவுக்கு முதல் பெனால்ட்டி வாய்ப்பை வழங்கியிருக்கக் கூடாது என்பதுதான்.

டி பாக்ஸுக்குள் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பாலே ஆர்ஜென்டினா வீரர் டி மரியா மீது மோதி பந்தைக் கடத்தவிடாமல் செய்ததாக ஆர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 23-ஆவது நிமிடத்தில் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடித்தார்.

இதுவே ஆர்ஜென்டினா முன்னிலை பெறுவதற்குக் காரணமாக அமைந்தது. அந்தத் தருணத்திலேயே ஆர்ஜென்டினா ரசிகர்கள் ஆராவாரம் செய்து கொண்டிருந்தாலும், பிரான்ஸ் ரசிகர்கள் அதை பெனால்ட்டியாக ஏற்கவில்லை.

இதற்காக ஆதாரமாக டி மரியாவைத் தொடும் காட்சிகளையும் பிரான்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள். டி மரியா தாமாகவே கீழே விழுந்ததாக பலர் பதிவிட்டார்கள். தமது மற்றொரு கால் தடுக்கியதாலேயே அவர் விழுந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்கள்.

இந்த பெனால்ட்டியை வழங்குவதற்கு கள நடுவர், காணொளி உதவியை நாடவில்லை என்பதையும் பிரான்ஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள். ஆனால் டெம்பாலே மெதுவாகத் தொட்டாலும், அது பெனால்ட்டிதான் என்று பதிலுக்கு விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்த விவாதம்தான் இப்போது இணையத்தில் மனுவாக உருவெடுத்திருக்கிறது.

‘இரண்டாவது கோல் செல்லாது’

இறுதிப் போட்டியின் 36-ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினா அணிக்கான இரண்டாவது கோலை டி மரியா அடித்தார். ஆர்ஜென்டினாவின் கோல் பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட பந்தை நெடுந்தூரம் ஓடி வந்து கோலுக்குள் அடித்தார் மரியா.

ஆனால் பந்தைக் கடத்திவரும்போது எம்பாப்பேவை தடுத்து ரொமேரோ ஃபவுல் செய்ததாக பிரான்ஸ் ரசிகர்கள் கூறுகிறார்கள். இதனால் டி மரியா அடித்த இரண்டாவது கோலையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இணையவழி மனுக்களால் மீண்டும் போட்டி நடக்குமா?

சமூக வலைத்தள விவாதங்கள், இணையவழி மனுக்கள், முறைப்பாடுகள் போன்றவை வைக்கப்பட்டாலும் இறுதிப் போட்டியை மீண்டும் ஒருமுறை நடத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

ஏனென்றால் இதற்கு முன்பு பலமுறையும் போட்டிகள் பற்றிய பல முறைப்பாடுகள் வந்தாலும் அதற்காக போட்டியை மீண்டும் நடத்தும் முடிவை ஃபிபா எடுத்ததில்லை.

வேறு என்ன சர்ச்சை?

இறுதிப் போட்டியில் முதல் இரண்டு கோல்கள் மாத்திரமல்லாமல் மெஸ்ஸி அடித்த ஆர்ஜென்டினாவின் மூன்றாவது கோலும் செல்லாது என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் தொடருகின்றன.

எனினும், கூடுதல் நேரத்தின்போது அடிக்கப்பட்ட இந்த கோலின்போது பந்து கோல் எல்லையை தாண்டி விட்டதால் அது செல்லக்கூடியது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஆடுகளத்துக்கு உள்ளே ஏற்பட்ட சர்ச்சைகளைத் தவிர கொண்டாட்டத்தின்போது சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன.

இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பேயை கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஆர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்ட்டினஸ் மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

காற்பந்து உலகக்கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டினா அணி வீரர்களுக்கு பியூனோஸ் அயர்ஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டபோது ஒரு குழந்தை பொம்மையில் எம்பாப்பேயின் முகத்தை பொருத்தி கொண்டு வந்தார் மார்ட்டினஸ்.

இந்தப் புகைப்படமும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன், கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது. இதற்கு முன்பும் மார்ட்டினஸ் பல முறை எம்பாப்பேயே கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

கத்தார் லூசாய்ல் மைதானத்தில் உலகக்கிண்ணத்தை வென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு, ஓய்வு அறையில் எம்பாப்பேக்காக ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்க வேண்டும் என்று கூறிய காணொளியும் இதேபோன்ற விமர்சனத்தைப் பெற்றது.

நன்றி- BBC தமிழ்

Latest news

நியூயார்க் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் மேயர்

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு விழாவில், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்தின் உழைக்கும் மக்களுக்காக உழைப்பதாக அவர் உறுதியளித்தார். 34 வயதான...

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...