அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகள் உடனடியாக பதிலளிக்காமல் பொறுமையாக ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் செயல்பட உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், அதன்பின் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகள் பல உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, “உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான்.. எந்தவொரு முடிவுக்கும் வரவோ அல்லது பதிலளிக்கவோ அவசரம் காட்டாதீர்..” என்று தெரிவித்துள்ளார்.
டான்ஸானியா நாட்டில் நடைபெற்ற ’மிஷன் 300 ஆப்பிரிக்க எரிசக்தி மாநாட்டில்’ பங்கேற்ற அஜய் பங்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தெந்த கொள்கைகளெல்லாம் செயல்படுத்தப்படுகின்றன என்பதை கொள்கை வகுப்பாளர்கள் பொறுத்திருந்து பார்த்து அதன்பின் செயல்படவும். டொனால்ட் ட்ரம்ப்புடன் சேர்ந்து நான் கடந்த காலங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் நடைமுறை சாத்தியக்கூறுகளுகளை அறிந்து செயல்படும் ஒரு மனிதர்.
அமெரிக்க அரசுப் பணியாளர்கள் வாரத்தில் 5 நாள்கள் அலுவலகங்களுக்கு வருகை தர டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், உலக வங்கியில் பணியாற்றும் பணியாளர்கள் வாரத்தில் 4 நாள்கள் அலுவலகங்களுக்குச் சென்று பணியாற்றும் நடைமுறையில் எவ்வித மாற்றமுமில்லை. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.