புதிய அனைத்துலக உத்தியின்கீழ் பாலினச் சமத்துவத்தைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை, அரசதந்திரம், வர்த்தகம், உதவித் திட்டங்கள் அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் புதன்கிழமையன்று (5ம் திகதி) தலைநகர் கேன்பராவில் தெரிவித்தார்.
பாலினச் சமத்துவம் நாட்டில் நிலவும் அமைதியைக் காட்டுவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவன நிகழ்வு ஒன்றில் அமைச்சர் வோங் கூறினார்.
பெண்களின் பாலியல், இனப்பெருக்க சுகாதார உரிமைகளைப் பாதுகாப்பதும் நிதி தொடர்பான விவகாரங்களில் பெண்களைச் சேர்த்துக்கொள்வதும் ஆஸ்திரேலியாவின் புதிய அனைத்துலகப் பாலினச் சமத்துவ உத்தியின் இலக்காகும்.
“உலகெங்கும் பெண்களுக்கு எதிராகப் பாலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதுமட்டுமல்லாது, பாலியல், இனப்பெருக்க சுகாதாரச் சேவைகள் போதுமான அளவில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை,” என்று வோங் கூறினார்.
பசிபிக் வட்டாரத்தில் மூன்றில் இரு பெண்கள் உடல்ரீதியிலான அல்லது பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாவதாக அவர் கூறினார்.
உலகளாவிய நிலையில், 380 மில்லியன் பெண்கள், சிறுமிகள் கடும் வறுமையில் வாடுவதாகவும் 2.4 பில்லியன் பெண்களுக்கு சமமான பொருளியல் வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.