சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதாவது, இந்த மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேலையைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் மாதத்துக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் தங்களைப் பற்றி சுய விமர்சனக் கடிதம் ஒன்றையும் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதற்கு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கடும் ஆட்சேபனை எழுந்ததால், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் கடுமையான விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு காரணிகளால், இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வதையே தள்ளிப்போடுகிறார்கள் அல்லது தவிர்த்து வருகிறார்கள். இதனால், திருமண உறவுகள் மற்றும் மக்கள் தொகை விகிதமும் கடுமையாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால்தான், சில நிறுவனங்கள், திருமணம் ஆகாமல் இருக்கும் தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா உள்பல பல நாடுகளில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கவலை ஏற்பட்டுள்ளது.