ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு ஒன்று, HIV சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
HIV பாதிப்புக்குள்ளானவர்களின் உடலுக்குள் காணப்படும் சில வெள்ளை அணுக்களுக்குள் இந்த HIV வைரஸ் மறைந்துகொள்ளும். ஆகவே, அந்த வைரஸை எந்த மருந்தும் எதுவும் செய்யமுடியாது.
இந்நிலையில், மெல்பேர்ணிலுள்ள Peter Doherty Institute for Infection and Immunity என்னும் நிறுவனத்தின் ஆய்வாளர்கள், வெள்ளை அணுக்களுக்குள் மறைந்துள்ள HIV வைரஸை வெளியே தெரியவைக்கும் ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அப்படி அந்த வைரஸை வெளியே தெரியவைத்துவிட்டால், பிறகு அதை உடலிலிருந்து அகற்றமுடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
கோவிட் காலகட்டத்தில் கொரோனாவைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட mRNA technology என்னும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் இந்த விடயம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக, ஒரு சிறிய, குறிப்பிட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட கொழுப்பு குமிழியில் mRNAவை அடைத்து, அதை HIV மறைந்திருக்கும் அணுக்களுக்குள் அனுப்பமுடியும் என்பதை ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர்.
பின்னர் அந்த mRNA, HIV வைரஸை வெளிப்படுத்துமாறு வெள்ளை அணுக்களுக்கு அறிவுறுத்துகிறது. உலகளவில், கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் HIV யுடன் வாழ்கின்றனர்.
அவர்கள் தங்கள் உடலுக்குள் இருக்கும் வைரஸ் வெளிப்படாமல் கட்டுப்படுத்துவதற்காகவும், அறிகுறிகள் தோன்றாமல் இருப்பதற்காகவும், HIV பரவாமல் தடுப்பதற்காகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
அதுவே பலருக்கு ஆபத்தாக முடிந்துவிடுவதும் உண்டு. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் HIV பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக ஐ.நா அமைப்பின் எய்ட்ஸ் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.