Air India விமானத்தில் இருந்த ஒருவர் விபத்தில் இருந்து தப்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் விமானத்தில் 11A இருக்கையில் பயணித்த பயணி என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மற்ற பயணிகள் மற்றும் பணியாளர்கள் இறந்துவிட்டதாக அகமதாபாத் காவல் ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேகனி நகர் என்ற மக்கள் தொகை அடர்த்தியாக வாழும் பகுதியில் ஒரு மருத்துவர்கள் விடுதியில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது.
அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FAIMA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு சுமார் 50-60 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உள்ளூர்வாசிகளும் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஐந்து மாணவர்களைக் காணவில்லை என்றும், இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சங்கம் கூறுகிறது.
இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கூற்றுப்படி, விமானம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசரநிலை குறித்துப் புகாரளித்தது. இந்த விமானம் போயிங் 787-8 ரகத்தைச் சேர்ந்தது.
விமானத்தில் இருந்த 169 பேர் இந்தியர்கள் என்றும் 53 பேர் பிரிட்டிஷ் பிரஜைகள் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கூடுதலாக, ஒரு கனடியனும் 7 போர்த்துகீசிய நாட்டவரும் விமானத்தில் இருந்தனர்.
இந்த விமானம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.