கனடாவின், பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டதை கனேடிய தமிழர் தேசிய அவை கண்டித்துள்ளது.
அறிக்கையொன்றினூடாக இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தின் முக்கிய அம்சங்களை ஒளிரச் செய்யும் பெரும்பாலான விளக்குகள் நேற்று காலை அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 27 ஆம் திகதி இரவு, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கெமராக்களிலிருந்து பெறப்பட்ட படங்கள், காணொளிகளைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு கனேடிய காவல்துறையினரை அந்த அமைப்பு கோரியுள்ளது.
சர்வதேச அங்கீகாரம், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி தேடும் தமிழ் மக்களின் நீண்ட நெகிழ்ச்சியான பயணத்தில், இந்த தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
அந்த நினைவுச்சின்னத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல், இனப்படுகொலைக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை மௌனிக்கச் செய்யும் முயற்சிகளாகும் என்றும் கனேடிய தமிழர் தேசிய அவை சுட்டிக் காட்டியுள்ளது.