விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டும் அலுவலகத்தை சோதனை செய்தபோது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில், கனடாவின் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் தொலைபேசி எண் காணப்பட்டதாக Global News தெரிவித்துள்ளது.
2006-ம் ஆண்டு Royal Canadian Mounted காவல்துறையின், தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய உலக தமிழ் இயக்க அலுவலகத்தை சோதனை செய்தபோதே, இந்த தொலைபேசி எண் கண்டுபிடிக்கப்பட்டதாக Global News குறிப்பிட்டுள்ளது.
ஆனந்தசங்கரி லிபரல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் பணம் சேகரிக்கும் திட்டம் குறித்த பயங்கரவாத எதிர்ப்பு விசாரணையின் ஒரு அங்கமாக, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரி ஆனந்தசங்கரி தற்போது கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகிறார். அத்துடன், கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை மற்றும் கனடா எல்லை சேவைகள் நிறுவனம் உள்ளிட்ட நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனங்களின் பொறுப்பாளராகவும் அவர் செயற்படுவதை Global News சுட்டிக்காட்டியுள்ளது.
2006 ஏப்ரல் 22-ம் திகதியன்று இந்த ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Gary A’ என்ற பெயருடன், ஆனந்தசங்கரி அப்போது பயன்படுத்திய தொலைபேசி எண்ணுடன் இந்த ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் கேரி ஆனந்தசங்கரி எந்தத் தவறும் செய்ததாக அந்த ஆவணங்களில் கூறப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில், இது தொடர்பில் விளக்கமளித்த ஆனந்த சங்கரியின் அலுவலகம், இந்த ஆவணம் பற்றி அமைச்சருக்கு தெரியாது என்றும் அது தமிழீழ விடுதலைப் புலிகளின் கனேடிய முன்னணி அமைப்பின் அலுவலகத்தில் இருந்தது எப்படி என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டதாக Global News தெரிவித்துள்ளது.
இந்த ஆவணம் , 2004 டிசம்பர் 29-ம் திகதியிடப்பட்டதாக இருந்தது.
அத்துடன், ஆழிப்பேரலையால் இலங்கையின் சில பகுதிகள் பேரழிவிற்கு உள்ளான மூன்று நாட்களுக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப அரசியல்வாதிகளை வற்புறுத்திய ஒரு குழுவில் அவர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கேரி ஆனந்தசங்கரி அப்போது ஒரு சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார் என்றும், ‘பேரழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கை மக்களுக்கு மனிதாபிமான நிவாரணத்தை ஆதரிப்பதற்காக இயக்கப்படும் முயற்சிகளை ஒழுங்கமைப்பதிலும் பங்கேற்பதிலும் முன்னணிப் பங்காற்றினார் என்றும் அவரின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது என குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த ஆவணம் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து அமைச்சருக்கு எந்தத் தகவலும் தெரியாது என அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாக Global News தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த விடயம் குறித்து சட்ட அமுலாக்கல் பிரிவு ஒருபோதும் அமைச்சரைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும், அவர் உலகத் தமிழ் இயக்கத்துக்காக ஒருபோதும் பணம் திரட்டவில்லை என்றும் அவரது அலுவலகம் குறிப்பிட்டதாக Global News தெரிவித்துள்ளது.