திறமையானவர்களுக்கான விசா கட்டணங்களை இரத்து செய்வது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா குடியேற்றவிசா குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இது தொடர்பில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிபுணர்களை பிரித்தானியாவுக்குள் ஈர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக மேற்படி திட்டத்தை பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய உலகின் முதல் ஐந்து பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் அல்லது மதிப்புமிக்க பரிசுகளை வென்றவர்களுக்கான விசா செலவுகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக ட்ரம்ப் நிர்வாகமானது H-1B விசாதாரர்களுக்கான கட்டணத்தை 1 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தியது. இதனால் அங்கு கல்வி கற்று தொழிலை பெறலாம் என எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஆகவே தற்போது பிரித்தானிய முன்னெடுக்கும் இந்த திட்டம் கைகொடுத்தால் அமெரிக்கா செல்ல நினைத்த மாணவர், தொழிலாளர் குழுக்கள் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது. இது பிரித்தானியாவின் பொருளாதாரத்தையும் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.