ஆஸ்திரேலியாவின் வளர்ந்து வரும் மின்-பைக் நெருக்கடி சாலைகளில் பெரும் ஆபத்தாக மாறி வருவதாக ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Mark Butler கூறியுள்ளார்.
மின்-பைக்குகளால் ஏற்படும் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதன் விளைவாக, ஆஸ்திரேலிய மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் தினமும் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
அதிக சக்தி கொண்ட மின்-பைக்குகள் மற்றும் மின்-ஸ்கூட்டர்கள் மிக அதிக வேகத்தில் பயணிப்பதால் பாதசாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் விபத்துகள் நீண்டகால காயங்களையும், உயிர் இழப்பையும் கூட ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் பல மின்-பைக்குகள் சரியான தரமின்றி ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், விபத்துகள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துகளில் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடுவதாகவும், இதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.





