பூமியில் இருந்து மொத்தமாக அழிந்துபோன ஒரு உயிரினத்திற்கு ஆய்வாளர்கள் உயிர் கொடுத்துள்ளனர்.
உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டை விலங்கில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும். இது கடந்த 10,000- 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது.
அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு உயிரினமே பூமியில் இல்லாத சூழலே இருந்தது. ஆனால், அதிநவீன DNA அனாலிசிஸ், CRISPR மரபணு எடிட்டிங் மற்றும் குளோனிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த ஓநாயை மீண்டும் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.
இதற்காக ஆய்வாளர் குழு அழிந்துபோன டையர் ஓநாய் புதைபடிவங்களிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்ததுள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவிலிருந்து 13,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் பல் மற்றும் இடாஹோவிலிருந்து 72,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் மண்டை ஓட்டில் இருந்து டி.என்.ஏ யை ஆய்வாளர்கள் பிரித்து எடுத்துள்ளனர்.
டையர் ஓநாய்கள் தங்கள் DNA-வில் 99.5% சாம்பல் ஓநாய்களுடன் பகிர்ந்து கொண்டது தெரிய வந்தது. இருப்பினும், 5.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அது பரிணாம ரீதியாக வேறுபட்டுவிட்டதும் தெரிய வந்தது.
பிறகு டையர் ஓநாய் DNA-வை சாம்பல் நிற ஓநாய்களுடன் ஒப்பிடுவதன் மூலம் அதன்அளவு , தசை அமைப்பு மற்றும் வெள்ளை நிற தோல் என அதன் தனித்துவங்களை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். 14 மரபணுக்களில் 20 முக்கியமான மரபணு மாறுபாடுகளை அடையாளம் கண்டனர்.
மேலும், சாம்பல் ஓநாயின் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்டோடெலியல் செல்களை (EPCs) பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர்.
இந்த செல்கள் டையர் ஓநாய் வகைகளுக்கு ஏற்ப எடிட் செய்யப்பட்டு, அணுக்கரு நீக்கப்பட்ட சாம்பல் ஓநாய் முட்டைகளில் அவை பொருத்தப்பட்டன. பிறகு அந்த கருக்கள் நாய்களுக்கு மாற்றப்பட்டன. அந்த நாய் தான் இப்போது மூன்று ஆரோக்கியமான டையர் ஓநாய் குட்டிகளான ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி ஆகியவற்றை பெற்றெடுத்துள்ளது.
இது அறிவியல் உலகில் மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.