ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
ஆனால் அந்த தொகையானது நியாயமற்றது மற்றும் அநியாயம் என குறித்த பெண்ணின் சட்டத்தரணி நிராகரித்துள்ளார். தற்போது 58 வயதாகும் Kathleen Folbigg என்பவர் கடந்த 2003ல் தனது பிள்ளைகள் நால்வரை படுகொலை செய்ததாக நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார்.
ஆனால் குழந்தைகள் நால்வரும் இயற்கை காரணங்களினாலோ அல்லது மரபணு மாற்றத்தினாலோ இறந்திருக்கலாம் என்பதற்கான புதிய அறிவியல் ஆதாரங்களை ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு கண்டறிந்ததை அடுத்து அவர் மன்னிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு, 2023 இல் அவரது தண்டனைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் ஜூலை 2024 இல் Folbigg-இன் இழப்பீட்டு கோரிக்கையை விரிவாகப் பரிசீலித்த பிறகு, மாகாண நிர்வாகம் அவருக்கு கருணைத் தொகையை வழங்க முடிவு செய்ததாக அரசு சட்டத்தரணி மைக்கேல் டேலி தெரிவித்தார்.
ஆனால், இந்தப் பணம் மிகவும் நியாயமற்றது மற்றும் அநீதியானது என்றும், இது Folbigg அனுபவித்த வலி மற்றும் துன்பத்தின் அளவைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவரது சட்டத்தரணி ரானி ரெகோ தெரிவித்துள்ளார்.
Folbigg தனது குழந்தைகளை மட்டுமல்ல, தனது வாழ்க்கையின் சிறந்த 20 ஆண்டுகளையும் இழந்தார். மேலும் அந்த அதிர்ச்சியின் நீடித்த விளைவுகளை தொடர்ந்து உணர்ந்தார் என்று ரெகோ கூறினார்.
Folbigg-இன் 19 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான குழந்தைகள், 1989 முதல் 1999 வரையிலான 10 வருட காலப்பகுதியில் இறந்தனர். போதுமான ஆதாரங்கள் இல்லாத போதிலும், Folbigg தமது பிள்ளைகள் ஒவ்வொருவரையும் கழுத்தை நெரித்து கொன்றதாக அரசு தரப்பு முன் வைத்த வாதத்தின் அடிப்படையில் 2003 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
அவரது 40 ஆண்டு சிறைத்தண்டனை பின்னர் 30 ஆகக் குறைக்கப்பட்டது. இச்சம்பவத்தின் போது உள்ளூர் நாளேடு ஒன்று அவரை அவுஸ்திரேலியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட பெண், மற்றும் கொடூரமான தாயார் உள்ளிட்ட வாசகங்களால் அடையாளப்படுத்தியது.
தற்போது மாகாண நிர்வாகம் அவருக்கு வழங்க முன்வந்துள்ள 1.31 மில்லியன் டொலர் எழப்பீடானது எந்த முறையில் முடிவு செய்யப்படுகிறது என்பதை விசாரிக்க வேண்டும் என Folbigg கோரிக்கை வைத்துள்ளார்.