ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 ஒக்டோபரிலும், மெல்பேர்ண் நகரத்தில் யூதக் கோயில் மீது கடந்த 2024 டிசம்பரிலும், தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களை, ஈரான் அரசுதான் இயக்கியுள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்களை ஆஸ்திரேலியாவின் புலனாய்வுத் துறை திரட்டியுள்ளதாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளும் முறிக்கப்படுவதாகவும், அந்நாட்டிலுள்ள ஆஸ்திரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
இத்துடன், ஆஸ்திரேலியாவுக்கான ஈரானின் தூதர் அஹமது சதேகி வெளியேற்றப்படுவார் எனவும், அந்நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள் அனைவரும் தாயகம் திரும்புமாறும் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ஈரானில் வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்படலாம் எனவே உடனடியாக வெளியேறுங்கள் என எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படைகளை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க பிரதமர் அல்பானீஸ் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.