ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆண்டுதோறும் நடைபெறும் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடரபில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலுக்கு வருத்தத்தையும், கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.
இது வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அகிம்சை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அகிம்சை என்ற கருத்து மற்றும் மகாத்மாவின் மரபு மீதான வன்முறைத் தாக்குதலாகும்.
இதற்கான உடனடி நடவடிக்கையை நாங்கள் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும் எங்கள் குழு ஏற்கனவே சம்பவ இடத்தில் உள்ளது. சிலையை அதன் அசல் வடிவமைப்புடன் மீட்டெடுக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் – என்று அது கூறியது.
ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அகிம்சை தினமாக நியமிக்கப்பட்ட காந்தி ஜெயந்தி, ஆண்டுதோறும் ஒக்டோபர் 2 ஆம் திகதியன்று லண்டனில் உள்ள நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி மற்றும் காந்திஜியின் விருப்பமான பாடல்களுடன் நினைவுகூரப்படுகிறது.
இந்தியா லீக்கின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலை, அருகிலுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மகாத்மா காந்தி சட்ட மாணவராக இருந்த நாட்களைக் குறிக்கும் வகையில் 1968 ஆம் ஆண்டு சதுக்கத்தில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் லண்டன் பெருநகர காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நாசவேலை குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றது.