சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் இந்தியக் கடவுச்சீட்டைக் கொண்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Bondi கடற்கரையில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 50 வயதுடைய துப்பாக்கிதாரி இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
அவர் கடந்த 30 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த நிலையில், இந்தியக் கடவுச்சீட்டையே வைத்திருந்துள்ளார்.
யூதர்களின் ‘Hanukkah’ பண்டிகை கொண்டாட்டத்தின் போது, குறித்த நபரும் அவரது மகனுமே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிதாரிகளில் ஒருவரை வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் துணிச்சலாகப் பின்னால் இருந்து தாக்கி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார்.
இதன்போது கைகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் கொடூரத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியப் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





