பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026-ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில் ‘நைட்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கல் கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். மார்ட்டின் வீதியில் வளர்ந்தவர். யாழ். பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1985ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியின் தலைமை மாணவ தலைவராகவும் (Head Prefect) திகழ்ந்தவர்.
இலங்கையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார்.
மூன்று தசாப்த காலத்திற்கும் மேலான இவரது கல்விப் பயணத்தில், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பதவிகளை வகித்த அவர், 2019 ஆம் ஆண்டு லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார்.
பிரித்தானியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றை நிஷான் கனகராஜா வழிநடத்தி வருகிறார்.
இவரது தலைமையின் கீழ் மாணவர்களில் 69% பேர் சிறுபான்மை இனப் பின்னணியைக் கொண்டவர்களாகவும், 38% பேர் பின்தங்கிய பகுதிகளிலிருந்து வந்தவர்களாகவும் உள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் முதல் பெண் மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வேந்தரை (Chancellor) நியமிப்பதில் முக்கிய பங்காற்றினார்.
ஏதிலிகளுக்கான ஆதரவு மற்றும் சமூக நலத் திட்டங்களில் சர்வதேச ரீதியில் பல கூட்டணிகளை உருவாக்கியுள்ளார்.
இந்த கௌரவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்திலிருந்து வந்த ஒரு சிறுவன், இன்று அரச குடும்பத்தினால் கௌரவிக்கப்படுவது என்பது ஒரு வியக்கத்தக்க பயணம். கல்வியின் மாற்றும் சக்தியினாலும், அது வழங்கும் வாய்ப்புகளினாலுமே இது சாத்தியமானது” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழ் கல்வியாளர் சர்வதேச மட்டத்தில் இத்தகைய உயரிய இடத்தைப் பிடித்திருப்பது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்க்கும் விடயமாகப் பார்க்கப்படுகிறது.





