அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பனிப்புயல் காரணமாக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் வசிக்கும் சுமார் 14 கோடி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெக்சாஸ், ஓக்லஹோமா, கன்சாஸ் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் (23) பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. டகோடாஸ், மின்னெசோடா ஆகிய இடங்களில் குளிர்காற்றின் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் சென்றதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்காளாகினர்.
லூயிசியானா, மிசிசிப்பி, டென்னிசி ஆகிய இடங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்திருப்பதால், மரங்கள், மின்சார கம்பிகள், கோபுரங்கள், வீதிகளில் சுமார் 1 இன்ச் அடர்த்திக்கு பனி படர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பல இடங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





