Newsஅனைவருக்கும் நன்றி - ஆஸ்திரேலியர்களின் கோரிக்கையில் விடுதலையான பிரியா - நடேசன்...

அனைவருக்கும் நன்றி – ஆஸ்திரேலியர்களின் கோரிக்கையில் விடுதலையான பிரியா – நடேசன் குடும்பம்

-

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக கடந்த நான்கு வருடங்களாக ஆஸ்திரேலியாவின் பல்வேறு தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பமொன்று பெரும் போராட்டத்தின் பின்னர் இன்று அவர்கள் வாழ விரும்பிய இடத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

தனித்தனியாக ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்து, திருமணம் செய்துகொண்ட நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர், குவீன்ஸ்லாந்து Biloela பிரதேசத்தில் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த நிலையில் – 2018 ஆம் ஆண்டு – அகதிக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, குடிவரவு அமைச்சின் தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். சட்ட ரீதியாக மேற்கொண்ட மேன் முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்தனர்.

அவர்களது தடுப்புக்கு எதிராக, அவர்கள் வசித்த குவீன்ஸ்லாந்து Biloela பிரதேச மக்கள் உடனடியாகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். “அமைதியான குடும்பமொன்றின் வாழ்வையும் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசு சீரழிக்கிறது” – என்று ஊடகங்கள் முதற்கொண்டு அனைத்துத் தரப்பிடமும் செய்திகளைக்கொண்டு சேர்த்தனர். நடேசலிங்கம் குடும்பத்தினரை விடுதலை செய்யுமாறு சுமார் ஆறு லட்சம் ஆஸ்திரேலியர்கள் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு சுமார் ஐயாயிரத்து 300 தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஊடாக நடேசலிங்கம் குடும்பத்தினரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேசிய அளவில் இந்தக்குடும்பத்தின் பிரச்சினை விழிப்புணர்வானது. நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கு நாட்களை எண்ணிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அரசின் முயற்சியை இயன்றளவு சட்ட ரீதியாக முறியடிப்பதற்கு, ஆஸ்திரேலியாவின் பல பொது அமைப்புக்கள் உதவ முன்வந்தன.

எல்லாவற்றையும் மீறி 2019 ஆம் ஆண்டு, நடேசலிங்கம் குடும்பத்தினர் சிறிலங்காவுக்கு விமானம் ஏற்றி அனுப்பப்பட்டனர். ஆனால, அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த, கடைசி நேர வழக்கின் மீது நீதிபதி வழங்கிய தீர்ப்பின் பேரில், டார்வினில் விமானம் தரித்தபோது, அதிலிருந்து இறக்கப்பட்ட நடேசலிங்கம் குடும்பத்தினர் மீண்டும் தடுப்புமுகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அகதிகள் நல அமைப்பினர், நடேசலிங்கம் குடும்பத்தினர் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாம்கள் அனைத்தினதும் முன்னிலையில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது விடுதலையைத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

இந்தக் காலப்பகுதியில், குவீன்ஸ்லாந்துக்குச் சென்றிருந்த அப்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் இப்போதைய பிரதமருமான அன்ரனி அல்பனீஸி, லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தக் குடும்பத்தினை நிச்சயம் தடுப்புமுகாமிலிருந்து விடுதலை செய்து, குவீன்ஸ்லாந்து பிரதேசத்தில் வாழ அனுமதி வழங்குவேன் என்று உறுதியளித்தார்.

அந்த உறுதிமொழியின் பிரகாரம், நடேசலிங்கம் குடும்பத்தினரை குவீன்லாந்து பிரதேசத்தில் வசிப்பதற்கு, அரசு அனுமதியளிப்பதாக லேபர் அரசின் குடிவரவு அமைச்சர் கடந்த வாரம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நடேசலிங்கம் குடும்பத்தினர் பேர்த்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று குவீன்ஸ்லாந்துக்கு கொண்டுவரப்பட்டனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கப்படும் மதுபானம் மீதான வரிகள்

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் மதுபானங்கள் மற்றும் முன் கலந்த பானங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஏனென்றால், பணவீக்கத்திற்கு ஏற்ப அரசாங்கம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மதுபான வரியை அதிகரிக்கிறது...

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை – 1200 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் Bloomberg செய்தி...

இன்று முதல் Economy வகுப்பு பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கும் Qantas

Qantas நிறுவனம் இன்று முதல் புதிய Economy Plus திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் Qantas Economy வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Economy Plus திட்டம் பயணிகளுக்கு...

ஜப்பானில் ski lift-இல் சிக்கி ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு

ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான ski ரிசார்ட்டில் ski lift-இல் சிக்கி 22 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். "பையில் இணைக்கப்பட்டிருந்த இடுப்புப்...

Logan பகுதியில் பல வாகனங்கள் மோதி விபத்து

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் Grater Brisbane பகுதியில் உள்ள Logan நகருக்கு அருகில் பல வாகனங்கள் மோதிக்கொண்டதால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Loganholme பசிபிக் மோட்டார்வேயில்...

கடுமையான வெப்பம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

பெர்த்தின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கி வருவதால், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Scarborough, Trigg, Doubleview,...