இலங்கையில் பரவும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ்…14 பேர் உயிரிழப்பு

0
189

இலங்கையில் பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சபரகமுவ மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் விசேட மருத்துவரான கபில கன்னங்கர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்திலேயே இந்த வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை பகுதியில் அண்மை காலமாக இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றானது கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், ஜுன் மாதத்தின் இதுவரையான காலம் வரை அந்த தொகையானது 103ஆக அதிகரித்துள்ளது என கபில கன்னங்கர தெரிவிக்கின்றார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவிலானோர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 75 பெண்களும், 33 ஆண்களும், 12 சிறார்களும் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அவர் கூறுகின்றார். பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 11 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவர். இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலான அனைத்து வகை மருந்துகள் தங்களிடம் இருப்பதாக சபரகமுவ மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் விசேட மருத்துவர் கபில கன்னங்கர தெரிவிக்கின்றார்.

Previous articleஇலங்கையின் தாமதமான முடிவு தான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்
Next articleஎவரெஸ்ட்டில் உருகும் பனிப்பாறைகள்…நேபாளம் எடுத்த அதிரடி முடிவு