எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை இளம் விவசாயி ஒருவர் கட்டிய சம்பவம் ஒன்று தம்புள்ள நகரில் இடம்பெற்றுள்ளதாக ‘லங்காதீப’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தம்புள்ளையில் உள்ள அதுபாறை பிரதேசத்தில் வசிக்கும் இளம் விவசாயியும் பால் பண்ணையாளருமான ஆர்.எம்.ரத்நாயக்க 50 கறவை மாடுகளை வளர்த்து வருகின்றார்.
தம்புள்ளை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்கு காத்திருந்தோர் வரிசையில் தனது தேவைகளுக்கும் மாடுகளின் தேவைகளுக்குமாக கறவை மாட்டின் பின்புறத்தில் தனது மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை எழுதி விட்டுள்ளார்.
பெற்றோலினை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்களாக வரிசையில் நின்றதாகவும், ஆனால் பெற்றோலினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை தொடர்பாக பிரதேச செயலாளர், காவல்துறையினர் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஆகியோருக்கு அவர் அறிவித்துள்ளதாக லங்காதீப இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.