ஒரு தாதா, அவனால் வார்க்கப்படும் குட்டி தாதா, அதே அரியணைக்குப் போட்டியிடும் சுற்றியிருக்கும் மற்ற ரவுடிகள் கூட்டம் என தமிழ் சினிமா பார்த்துப் பழகி சலித்துப்போன திரைக்கதை கொண்ட படத்தை டெல்லியில் எடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கராய சக்திவேல் (கமல் ஹாசன்) Real estate என்கிற பெயரில் தாதாவாக டெல்லியை ஆளும் ‘Thug’. ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலிருந்து சக்திவேல் தப்பிக்க உதவும் சிறுவனே அமரன் (சிம்பு). அதற்கு நன்றிக் கடனாக அமரனைத் தன் மகனாக வளர்க்கிறார் சக்திவேல்.
ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பாவின் ராஜ்ஜியத்தைப் பிடிக்க நிற்கிறார் மகன். அதற்கான காரணம் என்ன, துரோகம் செய்தவர்களை சக்திவேல் எப்படியெல்லாம் தண்டித்தார் என்பதை “தக்ஸின் வாழ்க்கை” எனத் தந்திருக்கிறார் மணிரத்னம்.
வழக்கம்போல காதல் காட்சிகளில் புன்னகை மன்னனாகவும், சண்டை மற்றும் கோபக் காட்சிகளில் ‘நாயகன் மீண்டும் வரார்’ என மாஸ் காட்டியுள்ளார் கமல். திருச்செந்தூர் கடற்கரையில் மனைவியிடம் உணர்வுபூர்வமாகப் பேசும் காட்சியில், நடிப்பில் சக்திவேலாகவே மிரட்டியுள்ளார்.
தன்மேல் சந்தேகம் வருகிற இடத்தில் ஏமாற்றம், ‘நான்தான் இனி ரங்கராய சக்திவேல்’ என்கிற இடத்தில் திமிர் என சிம்பு தன் பாத்திரத்தைத் திறம்பட நடித்திருக்கிறார். இருப்பினும் இரண்டாம் பாதியில் அவர் நம் மனதில் பதியும் காட்சிகள் குறைவே!
குழப்பமான மனநிலையைப் பிரதிபலிக்கும் த்ரிஷாவின் நடிப்பிலும் குறையேதுமில்லை.
அரியணைக்கு வஞ்சம் கொண்ட அண்ணனாகத் தன்னுடைய பலமான இடங்களில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நாசர்.
ஒருசில காட்சிகளே வந்தாலும் ஐஸ்வர்யா லட்சுமி மனதில் நிற்கிறார். இதுதவிர கதாபாத்திர வளைவுகள் அரை வட்டம், கால் வட்டம் போட்ட அளவில் முழுமையடையாமலே போக அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அலி பாசல் ஆகியோரின் கதாபாத்திரங்கள் தொக்கி நிற்கின்றன.
வில்லன் கதாபாத்திரமும் பெரும் ஏமாற்றமே! இருப்பினும் மகேஷ் மஞ்ச்ரேகர், அர்ஜுன் சிதம்பரம் போல அனைவரும் என்ன வளைவோ அதற்குரிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக, சண்டை வடிவமைப்பு, படத்தொகுப்பு என்பன நன்றாகவே இருந்தது.
பாடல்களில் மிரட்டி இருக்கிறார் A.R. ரஹ்மான். பின்னணி இசை முதல் பாதியில் காட்சிகளின் மீட்டரில் இருக்க, இரண்டாம் பாதியில் என்ன மீட்டர் என்று தெரியாத காட்சிகளோடு சேர்ந்து குழம்பி நிற்கிறது.
இவற்றைத் தாண்டி Flashback-ல் வரும் De-ageing காட்சிகளில் இளம் வயது கமல்ஹாசனையும் நாசரையும் திரையில் கொண்டு வந்த விதம் சூப்பர்!
படம் தொடங்கியபோதே இந்தக் கதை இப்படித்தான், முடிவு இப்படித்தான் என்பதைக் கணித்துவிட முடிகிறது. சிலபஸ் மாறாமல் அதுவே திரையிலும் ஒவ்வொன்றாக அரங்கேறுகிறது. இதனால் மோதல்கள், திருப்பங்கள் என எதிலும் சுவாரஸ்யம் உண்டாகவே இல்லை.
தொழில்நுட்ப ரீதியாக ‘Thug Life’ கண்ணாடியைப் போட்டு மிரட்டும் இந்தப் படம், திரைக்கதையில் அந்தக் கண்ணாடியைத் தொலைத்துவிட்டதால் சுவாரஸ்யத்தை நாம் தேட வேண்டியதாக இருக்கிறது.