ஆட்டிசமும் தீபனும் நானும்…ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி கையாளனும்…ஆலோசனை வழங்கும் பாமினி

0
317

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை எவ்வாறு கையாள்கிறார் என்ற தனது வாழ்க்கை அனுபவத்தை, மற்றவர்களுக்கு பாடமாக அல்லது அறிவுரையாக விளக்கி உள்ளார் பாமினி ராஜேஷ்வர முதலியார். அவர் தனது வாழ்க்கை அனுபவத்தை நீண்ட பதிவாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாமினி எழுதிய விரிவான பதிவு இதோ…

எனது மகன் தீபனுக்கு 31 வயது. அவன் supported independent living இல் வாழ்வது அனேகமாக அனைவரும் அறிந்ததே. தீபன் அங்கு வாழப்போய் இரண்டு வருடங்களாகி விட்டது.

எனது வீட்டில் இருந்து 7 நிமிட drive. எனது வேலையில் இருந்து 3 நிமிட drive. அருகில் தான் வாழ்கிறான்.

தினமும் இரண்டு தரம் கை தொலைபேசியில் அழைத்து முதல்நாள் மாலை என்ன activities செய்தார், னெ்ன மாலை உணவு உண்டார், இன்று காலை என்ன செய்யப் போகிறார் எனக்கூறி, என்னையும் கவனமாக சத்தான உணவாக உண்டு, உடல்பயிற்சியும் செய்து, இரவில் தியானம் செய்து நலமாக இரும்படி கூறுவான். இதுவே தினமும் பேசும் கதை.

இன்று காலை, எனது தொலைபேசிக்கு அவன் அழைத்தபோது அழைப்பை miss பண்ணி விட்டேன்.
எட்டு மணி அழைப்பை miss பண்ணிவிட்டேன் என்ற உணர்வுடன் தொலைபேசியை கையில் எடுக்க மீண்டும் அழைத்தான்.
நான் சந்தோஷமாக Good morning Darling என்றேன்.
No no எனக்கூறி அழைப்பை cut பண்ணிவிட்டு, மீண்டும் எடுத்து, start again எனக் கூறி good morning amma என்றான்.
தீபனே அழைத்து அவரே good morning கூற வேண்டும்.
நான் good morning என்றது அவரின் பழக்கத்திற்கு புறம்பானது.
என்னால் சிரிப்பை தாங்க முடியவில்லை.
எனக்குள் இரகசியமாக ரசித்து சிரித்துக் கொண்டேன்.

Children with autism
ஒரு பழக்கத்தை பழகிக் கொண்டால், அதனை விட்டு மாறுவது கஷ்டமானதாக இருக்கும். அதனால் அவர்களுக்கோ அடுத்தவருக்கோ பாதிப்பில்லையானால் அதனை நாம் மாற்ற வேண்டிய அவசியமில்லை.

ஆனால் பண்பற்ற பழக்கவழக்கங்கள், குளப்படிகளை ஆட்டிசம் என்ற பெயர்களில் வளர விடுவது தவறு.
சாதாரண சொற்களை படங்களை பயன்படுத்தி சரீயான பழக்கங்களை கற்பிக்க வேண்டும். அது பெற்றோரின் கடமையாகும்.

அத்துடன் சத்தமான, அவர்களை irritate பண்ணக்கூடிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதை ஆரம்ப காலத்தில் தவிர்ப்பது நன்மை தரும்.
அமைதியாக வாழப் பழக்கப்படுத்தினால் எதிர்காலத்தில் அவர்களுக்கு aggression, mental health issues போன்றவை வராமல் தவிர்க்கலாம்.
தீபன் vitamins ஐ தவிர வேறு எந்த மருந்தும் எடுப்பதில்லை.
பலர் மாத்திரைகளுடன் வாழ்கிறார்கள்.
ஆட்டிசத்துடன் வாழும் தீபனின் நடவடிக்கைகள் புரியாத புதிராக புதுமையானதாக இருக்கும்.
எனக்கு பழகிவிட்டது.
தனக்கு என்றொரு உலகத்தை அமைத்து, பலரின் ஆதரவுடன் திருப்தியாக மகிழ்வாக வாழ்கிறான்.
அந்த மகிழ்ச்சிக்குரிய ஆதரவை நாம் கொடுத்தாலே போதும். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் உருவாகும்.
மனநிலை பாதிப்பற்று வாழ்வார்கள்.

ஆட்டிசத்துடன் வாழும் பிள்ளைகளை பெற்றவர்களின் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கை போல் இருப்பது கடினம்.
அதனால் ஒப்பீடு இன்றி உண்மையான புரிந்துணர்வு உள்ளவர்களுடன் மட்டும் பழகி நிம்மதியாக வாழ முயலுங்கள்.
உங்களுக்கான உலகத்தை உருவாக்கி முடிந்தவரை நிம்மதியாக வாழுங்கள்.
ஆட்டிசம் என்ற புதிய உலகில் காலவி எடுத்து வைத்த பெற்றோர்களே…
உங்கள் வாழ்க்கை தினமும் மலையேறுவது போல் களைப்பாக இருக்கும்.
சில சமயங்களில் மூச்சுக் காற்று பற்றாக்குறையானது போல மூச்சுத் திணறும்.
பல நாட்கள் கட்டிலை விட்டு எழும்பவே மனம் வராது.
சில சமயங்களில் காலையில் கண்களை திறக்க பயமாக இருக்கும்.
இது கனவாக இருக்காதா என எண்ணத் தோன்றும்.
கோயில், குளம், church என போய் வணங்கினால் சுகம் வருமோ னெ எண்ணங்கள் உருவாகும்.
விரும்பினால் உங்கள் நிம்மதிக்காக மட்டும் போங்கள்.
பிள்ளையை அழைத்துச் சென்று மன்றாடுவதை விட்டு,
வீட்டில் நேரத்தை அவர்களுக்காக செலவிட்டு பிள்ளைகளை புரிந்து கொண்டு அவர்களை முன்னேற்றும் முயற்சியிலும் ஈடுபடுங்கள்.
அன்புள்ள பெற்றோர்களே…
பிள்ளையின் மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் காணக்காண, அவர்களின் குறைகள் எமது கண்ணில் மறைந்து, எமது பிள்ளை என்ற பாசம் மேலோங்க, எமது வாழ்வில் நிம்மதி உருவாகும்.

நான் தீபனின் அம்மா. பெருமையுடன் கூறுகிறேன். என் பிள்ளையையின் ஆட்டிசம் அவனின் ஒரு அங்கம்.
அதனை புரிந்தவர்கள், தீபனை மதிப்பவர்கள் மட்டுமே என் வாழ்வில்
அதனால்தான் ஒரு கையில் அடங்குபவர்களுடன் நிம்மதியாக வாழ்கிறேன்.
சிந்தியுங்கள்.

Previous article3 மாதங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற இலங்கையர்களின் எண்ணிக்கை வெளியானது
Next articleஇது என்னுடைய கதையல்ல; புலம் பெயர்ந்தவர்களின் கதை…ஆஸ்திரேலிய அமைச்சர் பென்னி வோங்