சென்னையில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

0
131

தமிழக தலைநகர் சென்னையில் கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தவிர்க்கும் பொருட்டு மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

திரையரங்குகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அங்காடிகளில் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிவதை அந்த நிறுவனங்களே உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வின் போது முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.