நடிகை ரியா சக்ரவர்த்தி மீது போதை பொருள் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

0
207

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு நடிகை ரியா சக்ரவர்த்தி தன் சகோதரர் மூலம் போதைப்பொருள் வழங்கியுள்ளதாக போதை பொருள் தடுப்பு போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தோனி படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகை உலுக்கியது.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் நடமாட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் அடிபட்டன. இதையடுத்து போதை பொருள் தடுப்பு போலீசார் தனியாக விசாரணை நடத்தி 35 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர். இதில் சுஷாந்த் சிங் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோரும் அடங்குவர். ரியா சக்கரவர்த்தி கைதாகி பின்னர் ஜாமீனில் வந்தார்.

இந்த நிலையில் போதை பொருள் தடுப்பு போலீசார் தற்போது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில், நடிகை ரியா சக்கரவர்த்தி தனது சகோதரர் உள்ளிட்ட சிலர் மூலம் போதை பொருட்களை வாங்கி சுஷாந்த் சிங்குக்கு கொடுத்ததாகவும், சுஷாந்த் சிங் தீவிர போதை பழக்கத்துக்கு அடிமையாவதற்கு ரியா உடந்தையாக இருந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleகோத்தபய ராஜபக்சே எங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை… சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்
Next articleகோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவியதா?