உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின.
இந்த நிலையில் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த டிரோன்கள், கார்கிவ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை தாக்கின.
இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷ்யா பதிவு செய்துள்ளது. மேலும் அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் ரஷ்யா வைத்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியில், ரஷ்ய உள்துறை அமைச்சரின் தகவலின்படி, ரஷ்யாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உள்ளார். ஆனால், வேறு எந்த தகவலும் இல்லை என தெரிவித்து உள்ளது.